ஆசியக் கோப்பையை நெருங்கியது பெண்கள் ஹாக்கி அணி
டெல்லி: ஜப்பானில் நடந்து வரும் பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் பைனலுக்கு இந்தியா முன்னேறியது. நேற்று நடந்த அரை இறுதியில், நடப்பு சாம்பியன் ஜப்பானை 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.
பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன. 8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பையில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, லீக் பிரிவில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சிங்கப்பூரை 10-0 என்ற கோல் கணக்கிலும், அடுத்ததாக சீனாவை 4-1 என்ற கோல் கணக்கிலும் மலேசியாவை 2-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது.

காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் அணியை 7--1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி சுலபமாக வென்றது. நேற்று நடந்த அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பானை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று நான்காவது முறையாக ஆசியக் கோப்பை பைனலுக்கு முன்னேறியது.
நேற்று நடந்த மற்றொரு அரை இறுதியில் தென் கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் சீனா வென்றது. நாளை நடக்கும் பைனலில் சீனாவை இந்தியா சந்திக்கிறது. லீக் போட்டியில் சீனாவை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் மூன்று முறை இந்தியா பைனலுக்கு முன்னேறியுள்ளது. அதில், 2004ல் பட்டம் வென்றது. சீனா இதற்கு முன், 1989 மற்றும் 2009ல் கோப்பையை வென்றுள்ளது.
இந்த ஆசியக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத அணி என்ற பெருமையுடன், லீக் ஆட்டத்தில் சீனாவை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்திய அணி சாதகமாக உள்ளது. ஆசியக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகம் உள்ளது.
Story first published: Saturday, November 4, 2017, 15:08 [IST]
Other articles published on Nov 4, 2017


Click it and Unblock the Notifications