இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நீக்கியுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முந்தைய தேர்தல், ஒலிம்பிக் சாசனப்படி நடக்கவில்லை. ஊழல் புகாரில் சிக்கிய அபய் சிங் சவுதாலா, லலித் பனோட் உள்ளிட்டோர் நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐ.ஓ.சி.) விதிமுறை அதில் கடைபிடிக்கப்படவில்லை என்பதால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை 2012ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஐ.ஒ.சி இடை நீக்கம் செய்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஐ.ஓ.சி.யின் புதிய சட்ட விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி தற்போது தேர்தல் நடந்தது. இதில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நீக்கியுள்ளது.
ஐ.ஒ.சி விதிகளின் படி இந்திய ஒலிம்பிக் சங்கம் நிர்வாகிகள் தேர்தலை நடத்தியதால் தடை நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. தடை நீக்கப்பட்டுள்ளதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.