விறுவிறுப்படையும் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி... அசத்தும் இந்திய அணி...மேலும் ஒரு பதக்கம்!
டெல்லி: உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி மேலும் ஒரு பதக்கத்தை கைபற்றியுள்ளது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தனது 9வது வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 2021ம் ஆண்டுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 19ந்தேதி தொடங்கி டெல்லியில் நடந்து வருகிறது. வருகிற 29ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டி இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியாகும்.

அதன்படி 11வது நாளான இன்று ஆண்கள் அணிக்கான 25 மீ ரேபிட் ஃபையர் பிஸ்டல் பிரிவின், இறுதிபோட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் விஜய் வீர் சிந்து, குர்தீப் சிங், ஆதர்ஷ் சிங் ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர். அமெரிக்காவை சேர்ந்த கெயித் சாண்டர்சன், ஜாக் ஹாப்சன் மற்றும் ஹென்றி டேர்னர் ஆகியோர் 10- 2 என்ற கணக்கில் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

11-வது நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 13 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 4 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், இத்தாலி 2 தங்கம், 2 வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் உள்ளது.


Click it and Unblock the Notifications