ஜெய்ஷா பின்னாலதான் ஓடிவந்தேன்.. எனக்கு தண்ணீர் கிடைத்ததே.. சக மாரத்தான் வீராங்கனை பரபரப்பு பேட்டி
டெல்லி: ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் தண்ணீர் கூட தரவில்லை என்று இந்திய வீராங்கனை ஜெய்ஷா கூறியிருந்த நிலையில், தண்ணீர் போதிய அளவுக்கு கிடைத்ததாக அதே பந்தையத்தில் ஜெய்ஷாவுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருந்த மற்றொரு இந்திய வீராங்கனை கவிதா ராவுத் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் மகளிர் மாரத்தான் போட்டியில் மொத்தம் 157 பேர் பங்கேற்றனர். அதில் ஜெய்ஷா மற்றும் கவிதா ராவுத் ஆகிய இந்திய வீராங்கனைகள் இருவரும் இருந்தனர். மொத்தம் 42.13 கிமீ தூரம் ஓட வேண்டும்.

தலா 2.50 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் வீராங்கனைகளின் நாடுகள் குடிநீர், புத்துணர்ச்சி பானங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம். 8 கி.மீ இடைவெளிக்கு ஒருமுறை, ஒலிம்பிக் கமிட்டியின் குடிநீர் பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தன.
பந்தைய தூரத்தை 89வது நபராக கடந்த ஜெய்ஷா, அங்கேயே மயங்கி விழுந்தார். சிகிச்சைக்கு பிறகு தாயகம் திரும்பிய அவர், குடிக்க தண்ணீர் தராததால்தான் மயங்கிவிட்டதாக கூறினார்.
ஆனால், அவருக்கு பின்னால் எல்லைக்கோட்டை தொட்டு 120வது இடத்தை பிடித்த கவிதாவோ இதை மறுத்துள்ளார். ஜெய்ஷாவைவிட சுமார் 2 கி.மீ தூரம் பின்னால் ஓடிவந்த தனக்கு குடிநீர் கிடைத்ததே.. முன்னால் ஓடிய அவருக்கு எப்படி கிடைக்காமல் போயிருக்கும் என கேள்வி எழு்புகிறார் அவர்.
மேலும், உங்களுக்கு எந்த மாதிரி பானம் தேவை என்று, முந்தைய நாளே இந்திய தடகள சம்மேளன அதிகாரிகள் வீராங்கனைகளிடம் கேட்டு தகவல் பெற்றுச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு பானம் குடித்து பழக்கம் இல்லை என்பதால், மறுத்துவிட்டதாகவும் எனவே தண்ணீரை குடித்தபடியே எல்லையை கடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
வெயில் அதிகமாக இருந்ததால் ஜெய்ஷா மயங்கியிருக்கலாம் என்றும், ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்வரை ஜெய்ஷாவுடன் தான் இருந்ததாகவும், கவிதா கூறியுள்ளார்.
ஜெய்ஷா குற்றச்சாட்டை ஏற்கனவே, இந்திய தடகள சம்மேளனமும் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications