காமன்வெல்த்தில் இந்திய பதக்க வேட்டை தொடர்கிறது... ஹாட்ரிக் தங்கம் வென்றார் சுஷில் குமார்
கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் 8ம் நாளான இன்று மல்யுத்தத்தில் சுஷில் குமார் மற்றும் ராகுல் அவாரே தங்கம் வென்றனர். இதைத் தவிர மல்யுத்தத்தில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு இதுவரை, 14 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என, 31 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இது சுஷில் குமாருக்கு காமன்வெல்த்தில் ஹாட்ரிக் தங்கமாகும்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் இந்தியாவுக்கு முதல் நாளில், மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி வென்றனர். இரண்டாவது நாளில், பளு தூக்குதலில் சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம், 18 வயதாகும் தீபக் லேதர் வெண்கலம் வென்றனர். மூன்றாவது நாளில் பளு தூக்குதலில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம், ரகலா வெங்கட் ராகுல் தங்கம் வென்று அசத்தினார்.
நான்காவது நாளில் மகளிர் பளு தூக்குதலில் பூனம் யாதவ் தங்கம், துப்பாக்கி சுடுதலில் 11-ம் வகுப்பு மாணவி மனு பாக்கர் தங்கமும், ஹீனா சித்து வெள்ளியும், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள்ஸ் பிரிவில் ரவிக்குமார் வெண்கலமும் வென்றனர். பளுதூக்குதலில் விகாஸ் தாகுர் வெண்கலம் வென்றார். அதைத் தொடர்ந்து மகளிர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது.
ஐந்தாவது நாளில் ஆடவருக்கான 105 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பிரதீப்சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஜித்து ராய் தங்கம், ஓம் மிதர்வால் வெண்கலம் வென்றனர். ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம், பாட்மின்டன் அணி தங்கம் வென்றது.

மாற்றுத் திறனாளிக்கு பதக்கம்
ஆறாவது நாளில், மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஹீனா சிந்து தங்கம் வென்று அசத்தினார். பாரா பளுதூக்குதலில், ஆடவர் ஹெவிவெயிட் பிரிவில், இந்திய மாற்றுத் திறனாளி வீரர் சச்சின் சவுத்ரி வெண்கலம் வென்றார்.

ஸ்ரேயாசிக்கு தங்கம்
போட்டியின் 7வது நாளான நேற்று துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் டபுள் டிராப் பிரிவில் ஸ்ரேயாசி சிங் தங்கம் வென்றார். ஆடவர் டபுள் டிராப் பிரிவில் அங்குர் மிட்டல் மற்றும் ஆடவர் 50 மீட்டர் பிஸ்டர் பிரிவில் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலம் வென்றனர். அதையடுத்து 7 நாட்களில் இந்தியாவுக்கு 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என, 24 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஹாட்ரிக் அடித்தார் சுஷில்
இந்த நிலையில் போட்டியின் 8வது நாளான இன்று மல்யுத்தத்தில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்தது. துப்பாக்கிச் சுடுதலில் ஒரு வெள்ளி கிடைத்தது. மல்யுத்தம் ஆடவர் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ராகுல் அவாரே தங்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆடவர் 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் சுஷில் குமார் தங்கம் வென்று அசத்தினார். இது சுஷிலுக்கு ஹாட்ரிக் தங்கமாகும். முன்னாள் உலகச் சாம்பியனான அவர், ஒலிம்பிக்கில்
இரண்டு பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவுக்கு பதக்கம் குவிகிறது
துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். மல்யுத்தம் மகளிர் 53 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் பபிதா குமார் வெள்ளியும் மகளிர் 75 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் கிரண் வெண்கலமும் வென்றனர். தடகளத்தில் மகளிர் வட்டு ஏறிதலில் சீமா அந்தில் வெள்ளியும், நவ்ஜித் தில்லான் வெண்கலமும் வென்றனர். இதையடுத்து இந்தியாவுக்கு இதுவரை 14 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என, 31 பதக்கங்கள் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications