ஜூலை 23ல் துவக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 8ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து பாரா ஒலிம்பிக்கும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடகொரியா அறிவிப்பு
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று வடகொரியா தற்போது அறிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடந்த 25ம் தேதி ஒலிம்பிக் கமிட்டியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிறப்பான பங்களிப்பு
கடந்த 1984 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்த வடகொரியா அதையடுத்து தற்போதுதான் ஒலிம்பிக்கிலிருந்து இந்த விலகல் முடிவை எடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் வடகொரியாவின் இந்த முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இல்லாத கொரோனா பாதிப்பு
கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக சர்வதேச அளவில் எந்த நாட்டுடனும் என்ற வர்த்தகமும் செய்யாமலும் யாரையும் நாட்டிற்குள் அனுமதிக்காமலும் சர்வதேச அளவில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது வடகொரியா. இதையடுத்து அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.