விளையாட்டுப் போட்டிகள் முடக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று மாதங்களாக விளையாட்டுப் போட்டிகளை முடக்கி வைத்து இருந்தது. பிரபல ஐரோப்பிய கால்பந்து தொடர்கள் கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. மற்ற விளையாட்டுக்களும் மீண்டும் துவக்க திட்டமிட்டு வந்தன.
டென்னிஸ் நடத்த முடிவு
இந்த நிலையில், டென்னிஸ் போட்டிகளையும் நடத்த நேரம் வந்துவிட்டதாக கருதினார் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக். அவரும், அவரது சகோதரரும் சேர்ந்து அவர்களின் சொந்த நாடான செர்பியா மற்றும் அருகே உள்ள மூன்று நாடுகளில் நிவாரண நிதி திரட்டும் டென்னிஸ் தொடரை நடத்த முடிவு செய்தனர்.
அட்ரியா தொடர்
அட்ரியா தொடர் என்ற பெயரில் நடத்தப்பட்ட அந்த தொடரில் வெளிநாட்டில் இருந்து டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றனர். நோவாக் ஜோகோவிக்கும் அந்த தொடரில் பங்கேற்றார். அந்த தொடரின் முதல் பகுதி செர்பியாவில் ரசிகர்கள் நிறைந்த அரங்கில் நடைபெற்றது.
சமூக விலகல் இல்லை
அப்போதே சமூக விலகல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. ஆனால், ஜோகோவிக் அரசு சொல்வதை நாங்கள் செய்கிறோம் என பொறுப்பின்றி கூறினார். இரண்டாம் கட்ட தொடர் குரோஷியா நாட்டில் நடந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு
அந்த தொடரின் கடைசி போட்டிக்கு முன் கிரிகோர் டிமிட்ரோவ் உடல்நிலை சரியில்லாமல் விலகினார். அதன் பின், நடந்த பரிசோதனையில் கிரிகோர் டிமிட்ரோவ், போர்னா கோரிக், விக்டோர் ட்ரோய்க்கி என மூன்று டென்னிஸ் வீரர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகினர்.
கடும் விமர்சனம்
இதையடுத்து, அந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் பரிசோதனை செய்து வருகின்றனர். அதிக நோவாக் ஜோகோவிக் மற்றும் அவரது மனைவி ஜெலீனா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இந்த நிலையில், தொடரை நடத்திய ஜோகோவிக் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
கிளப்பில் பார்ட்டி
இந்த டென்னிஸ் தொடரில் எந்த சமயத்திலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை நடந்ததாக தெரியவில்லை. வீரர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், இரவு நேரத்தில் ஒரு கிளப்பில் பார்ட்டி செய்தது குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பெரிய முட்டாள்தனம்
பல டென்னிஸ் வீரர்கள் இது பெரிய முட்டாள்தனம் என விமர்சித்து வருகின்றனர். இந்த டென்னிஸ் தொடரால், தற்போது அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மற்றும் அதைத் தொடர்ந்து நடக்க இருந்த டென்னிஸ் தொடர்கள் சிக்கல் இல்லாமல் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மன்னிப்பு
தான் செய்த தவறை உணர்ந்த நோவாக் ஜோகோவிக் மன்னிப்பு கேட்டுள்ளார். நாங்கள் நல்ல நோக்கத்தில் தான் இதை செய்தோம். ஆனால், சீக்கிரமே டென்னிஸ் தொடர் நடத்தி விட்டோம். இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை எண்ணி நான் எவ்வளவு மன்னிப்பு கேட்கிறேன் என்பதை என்னால் வெளியே சொல்ல முடியவில்லை என ஜோகோவிக் உருக்கமாக தன் பதிவில் கூறி உள்ளார்.