மீரட்: ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குறிய கருத்தை வெளியிட்டவர் மீது உத்திரபிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் நதீம் நம்பர்தார் என்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் சாக்ஷி மாலிக் குறித்தும், அவரது மதம் குறித்தும் கருத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட நதீம் நம்பர்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஉள்ளூரில் உள்ள சமூக அமைப்பு ஒன்று சைபர் கிரைமில் புகார் அளித்தது.
இந்த புகாரின் பேரில் நதீம் நம்பர்தார் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டத்தின் (IT act) கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவான நதீம் நம்பர்தாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நம்பர்தாரின் பேஸ்புக் பக்கத்தை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்த போது, அவர் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் என குறிப்பிட்டு இருப்பது தெரியவந்தது. ஆனால், சமாஜ்வாதி கட்சிக்கும் அந்த நபருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.