சென்னை: மிகவும் வலுவான குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியை வென்று, புரோ கபடி லீக் போட்டியில், தொடர்ந்து மூன்றாவது சீசனில் சாம்பியன் பட்டத்தை பட்னா பைரேட்ஸ் அணி தக்க வைத்துள்ளது.
புரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகள், கடந்த மூன்று மாதங்களாக நடந்தது. இந்த முறை தமிழ் தலைவாஸ் உள்பட நான்கு புதிய அணிகள் சேர, மொத்தம், 12 அணிகள் களமிறங்கின.
நேற்று இரவு நடந்த பைனலில், தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற பட்னா பைரேட்ஸ் அணியும், குஜராத் பார்சூன் ஜயன்ட்ஸ் அணியும் மோதின.
துவக்கத்தில் குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணி புள்ளிகளைச் சேர்க்கத் துவங்கியது. ஒரு நிலையில், 14-7 என குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் முன்னிலையில் இருந்தது.
ரெய்டு மெஷின் என்று கூறப்படும் பட்னா பைரேட்ஸ் அணி பிரதீப் நர்வால், பசிகொண்ட சிங்கம் போல் சிலிர்த்து எழுந்தார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறி விட்டது.
பிரதீப் நர்வால் 19 புள்ளிகள் எடுத்து, கடந்த இரண்டு ஆட்டங்களில் கடும் சவால் விடுத்த குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியை பிரித்து மேய்ந்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிகச் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 26 போட்டிகளில், 369 புள்ளிகள் எடுத்து, மிகச் சிறந்த ரெய்டர் விருதையும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டத்தை பட்னா பைரேட்ஸ் அணி வென்றது. அந்த அணி்க்கு, ரூ.3 கோடி பரிசு வழங்கப்பட்டது. குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணிக்கு, ரூ.1.8 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது.