கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தில் ஐரோப்பா கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு காரணம், ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸை முக்கிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் கட்டுப்பாடுகள் விதிக்காமல் இருந்தது தான்.
அமெரிக்கா மெத்தனம்
அதே நிலையில் தான் அமெரிக்காவும் இருந்தது. எந்த கடும் கட்டுப்பாடுகளும் விதிக்காமல் மெத்தனமாக இருந்தது அமெரிக்கா. எந்த விளையாட்டுத் தொடர்களையும் நிறுத்தவில்லை. எந்த தொழிலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. மக்கள் கூட்டமாக சேருவதை தடுக்கவில்லை.
மோசமாக பாதிக்கப்பட்ட அமேரிக்கா
அதன் விளைவாக, தற்போது அமெரிக்கா உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மாறி உள்ளது. தற்போது அமெரிக்காவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை பலியாகி இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் அமெரிக்கர்.
WWE நிலை
பாதிப்புகள் கடுமையான பின் அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், WWE ரசிகர்கள் இல்லாத அரங்கில் போட்டிகளை நடத்தி பதிவு செய்து, பின் அதை ஒளிபரப்பி வந்தது.
ஒருவருக்கு பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே WWE போட்டிகளை நடத்தியே ஆக வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த மாதம் WWE ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். எனினும், அவர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் கூறி சமாளித்து WWE.
ப்ளோரிடாவில் அனுமதி
நேரலையில் போட்டிகள் நடத்த முடியாமல், பெரிய அரங்கங்கள் கிடைக்காமல் தவித்து வந்த WWEக்கு ப்ளோரிடா அரசு தன் கதவுகளை திறந்து விட்டுள்ளது. கடந்த வெள்ளி அன்று ப்ளோரிடா கவர்னர் மக்கள் நல்ல நிகழ்ச்சிகள் பார்க்க முடியாமல் ஏங்குவதாகவும், அதனால் WWE நிகழ்ச்சிகளை தங்கள் மாகாணத்தில் நடத்தி, நேரலையில் ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் மளிகை, மருத்துவம், காவல்துறை ஆகியவற்றோடு WWE-ஐ இணைத்து "புரட்சி" செய்துள்ளார்.
கட்டுப்பாடு உண்டு
இது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது ரசிகர்களுக்கு அரங்கினுள் அனுமதி கொடுக்காத பட்சத்தில் தான் போட்டிகள் நடத்தலாம் எனக் கூறி லேசான கட்டுப்பாடு இருப்பதை சுட்டிக் காட்டி உள்ளார். இந்தா அறிவிப்பு வெளியான உடனேயே (அனேகமாக அதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு) WWE நேரலைக்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டது.
WWE நேரலை
கடந்த திங்கள் அன்று ப்ளோரிடாவின் ஓர்லாண்டோ எனும் இடத்தில் இருக்கும் தன் அரங்கில் நேரலையில் மன்டே நைட் ரா நிகழ்ச்சியை ஒளிபரப்பி உள்ளது WWE. பதிவு செய்து வெளியிடுவதை காட்டிலும், நேரலையில் போட்டிகளை ஒளிபரப்ப கூடுதல் பணியாளர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கொந்தளிக்கும் மக்கள்
அமெரிக்காவில் மக்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில், WWEக்கு அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம் கொடுத்து இருப்பதை கண்டு மக்கள் பலரும் கொந்தளித்து வருகிறார்கள். சிலர் கட்டுப்பாட்டில் இருக்கும் தங்களுக்கு விருப்பமான இடங்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றுக்கும் அனுமதி தாருங்கள் என கோரிக்கை வைக்கும் கூத்தும் நடந்து வருகிறது.
அரசியல் செல்வாக்கு
WWE உரிமையாளர் வின்ஸ் மிக்மேன் மற்றும் அவரது மனைவி லிண்டா ஆகியோர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள். முன்பு ஒருமுறை டிரம்ப் WWE நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது. லிண்டா டிரம்ப் அரசில் ஒரு சிறிய பதவி ஒன்றில் இருந்தார். அந்த அரசியல் செல்வாக்கை எல்லாம் வைத்து தான் WWE நேரலையில் போட்டிகளை நடத்த அனுமதி வாங்கி உள்ளது என பேசப்படுகிறது.