டெல்லி: 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை இழந்ததற்கு காரணம் சரியாக சாப்பிடாததே என்று இந்தியாவின் வேகமங்கை பிடி உஷா கூறியுள்ளார்.
1980களில் சர்வதேசப் போட்டிகளில் தடகளத்தில் பல்வேறு பதக்கங்களை வென்று தந்தவர் பிடி உஷா. ஓட்டப் பந்தயத்தில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும், அவரால் மறக்க முடியாதது, 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிதான். அந்தப் போட்டியில் ஒரு விநாடியின் நூறில் ஒரு பங்கு நேரத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார் உஷா.
400 மீட்டர் தடையோட்டத்தில் பங்கேற்ற உஷா 55.42 விநாடிகளில் தொலைவைக் கடந்தார். ருமேனியாவின் கிறிஸ்டியானா கோஜோகாரு 55.41 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார். மொராக்கோவின் மொடாவாகல் 54.61 விநாடிகளில் கடந்து தங்கமும், அமெரிக்காவின் ஜூடி பிரவுன் 55.20 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றனர்.
அந்தப் போட்டியில் திட்டமிட்டபடி முதல் 45 மீட்டரை 6.2 விநாடிகளில் கடந்தேன். அந்த வேகத்தை தொடர்ந்து தக்க வைத்தேன். ஆனால் கடைசி 35 மீட்டரில் என்னுடைய சக்தியின் அளவு குறைந்ததால் வேகத்தை தொடர முடியவில்லை என்று உஷா கூறியுள்ளார்.
இதற்கு காரணம், அந்தப் போட்டியின்போது சத்துள்ள உணவுகளை சாப்பிடாததே காரணம் என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார். அரிசி கஞ்சி மற்றும் ஊறுகாய்தான் எங்களுக்கு உணவு. இது போதிய ஊட்டச்சத்தை அளிக்கவில்லை. அதுவே போட்டியில் பதக்கத்தை இழப்பதற்கு காரணமாகிவிட்டது.
அதனால் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கி வருகிறார்.