ரியோ டி ஜெனிரோ: 4 வருட தடையால் மிகவும் உடைந்துவிட்டதாக இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் நர்சிங் யாதவை இடைநீக்கம் செய்து இருந்தது.
இது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் நர்சிங் யாதவ் ஆஜராகி மூன்று மணி நேரம் விளக்கம் அளித்தார். இதனையடுத்து நர்சிங் யாதவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதால், ரியோ ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்த விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்துள்ளது. எனவே நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் நர்சிங் யாதவ்-க்கு எதிராக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து ரியோ ஒலிம்பிக்கில் நர்சிங் யாதவ் போட்டியிட தகுதியானவர் என்று அறிவித்துள்ளது.
ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா), ஊக்கமருந்து புகாரில் இருந்து நர்சிங் யாதவை விடுவித்துள்ளதை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா) மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டை நடுவர் மன்றம் ஏற்று நர்சிங் யாதவ்வுக்குக் கடுமையான தண்டனையை அளித்துள்ளது. அதன்படி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நர்சிங் யாதவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று நடைபெறவுள்ள ஆடவர் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியின் முதல் சுற்றில் நர்சிங் யாதவ் பங்கேற்க முடியாது. அத்துடன், அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஒலிம்பிக் வில்லேஜிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நர்சிங் யாதவ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த இரு மாதங்களாக நான் தீவிர பயிற்சியை மேற்கொண்டிருந்தேன். நாட்டுக்காக ஆடப்போகிறோம் என்ற எண்ணம் எனக்கு உத்வேகத்தை தந்து கொண்டிருந்தது. ஆனால், எனது முதல் போட்டிக்கு 12 மணி நேரங்கள் முன்பாக, இரக்கமின்றி, எனது வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் உடைந்துபோயுள்ளேன்.
அதேநேரம், என்னை நிரபராதி என நிரூபிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுப்பேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், நர்சிங் யாதவ் இந்திய மீடியாக்கள் பார்வையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.