இந்திய டென்னிஸ் அணி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த முறை டென்னிஸ் போட்டிக்கு 3 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அங்கிதா ராணாவும் இந்தியாவின் சார்பில் களமிறங்குகின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர் வீரர் ரோஹன் போபண்ணா - சுமித் நாகல் ஜோடி தேர்வாகவில்லை.
வாய்ப்பு மறுப்பு
இந்நிலையில் ஒலிம்பிக்கில் தகுதி பெறுவது குறித்து தன்னை தவறாக வழிநடத்தியதாக அகில இந்திய டென்னின்ஸ் சங்கம் மீது சீனியர் வீரர் போபண்ணா குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச டென்னின்ஸ் சம்மேளனத்திற்கு முதலில் போண்ணா -தி விஜ் சரண் ஜோடியையே இந்திய டென்னிஸ் சங்கம் பரிந்துரைத்தது. ஆனால் அவர்கள் தகுதி பெற தேவையான புள்ளிகள் பெறாததால் இணையை மாற்றி போபண்ணா - சுமித் நாகல் ஜோடியை AITA பரிந்துரைத்தது. எனினும், ITF அதனை ஏற்க மறுத்துவிட்டது. ஜூலை 16க்கு பிறகு காயம், உடல்நலக்குறை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் புதிய நுழைவு ஏற்கப்படாது என தெரிவித்துவிட்டது.
குற்றச்சாட்டு
இதுகுறித்து ட்விட்டரில் புகார் கூறியுள்ள போபண்ணா, என்னையும் - சுமித் நாகலையும் கண்டிப்பாக ஒலிம்பிக்கிற்கு பரிந்துரைத்து தகுதி பெற வைப்பதாக AITA கூறியிருந்தது. ஆனால் புதிய நுழைவுகளுக்கான காலக்கெடு முடிந்துவிட்டது என தற்போது ITF திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. எனவே ஒலிம்பிக்கில் தகுதி பெறும் விவகாரத்தில் என்னையும், நாட்டையும் இந்திய டென்னிஸ் சங்கம் தவறாக வழிநடத்தியுள்ளது என குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சானியாவின் கண்டனம்
இதனிடையே இதற்காக குரல்கொடுத்த சானியா மிர்சா, AITA நன்றாக விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்படி தவறாக வழிநடத்தியது வெட்க கேடானது. இதன் விளைவாக இரட்டையர் பிரிவில் ஒரு தங்க பதக்கம் கிடைக்காமல் போகவுள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டென்னிஸ் சங்கம் விளக்கம்
சானியா ட்வீட் போட்டவுடன் இந்த விவகாரம் சூடுபிடித்த நிலையில் இந்திய டென்னிஸ் சங்கம் ட்விட்டரில் பதிலளித்துள்ளது. அதில், போபண்ணா - சானியா எதுவும் தெரியாமல் கருத்துகளை பதிவிடக்கூடாது. முதலில் அவர்கள் ITF விதிமுறை புத்தகத்தை படித்து பார்க்க வேண்டும். அதில் தேர்வு முறை குறித்து தெளிவாக போடப்பட்டுள்ளது. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் ITF ஏற்கவில்லை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.