மாஸ்கோ: ரஷ்யா, கஸகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுககளைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர்கள், வீராங்கனைகள் அடிக்கடி ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்குவதால் அந்த நாடுகளை ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து தடை செய்ய நேரிடும் என சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாடுகளுக்கு சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கி்ல் கலந்து கொள்ள ரஷ்யாவைச் சேர்ந்த சில தடகள வீரர் வீராங்கனைகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இதே காரணத்திற்காகத் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது பளு தூக்குதல் பிரிவிலும் ரஷ்யாவுக்கு சிக்கல் வந்துள்ளது.
இது குறித்து சர்வதேச பளு தூக்குதகல் சம்மேளனம் கூறுகையில், "கடந்த 2008 ஒலிம்பிக் மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 20 பேருடைய மாதிரிகளில் சந்தேகம் உள்ளது. இவர்கள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது உறுதியானால், ஒரு வருட கால தடை விதிக்கப்படும்.
அதன்படி தற்போது ரஷ்யா, கஸகஸ்தான், பெலராஸ் ஆகியவை தடையை எதிர்நோக்கியுள்ள நாடுகள் ஆகும். இதுகுறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்குவதும் கவலை தருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல்கேரியாவுக்கு சம்மேளனம் தடை விதித்துள்ளது. எனவேம் பல்கேரியா இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. அதேபோல, வட கொரியா, ருமேனியா, உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான், மால்டோவா ஆகிய நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.