வீரர்களின் கனவு
இந்நிலையில், இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இது அவரது 4வது ஒலிம்பிக் தொடராகும். இது சாதாரண விஷயமல்ல. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் கிடைக்கும் கௌரவத்தின் உச்சமாகும். உள்ளூர் அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று ஒவ்வொரு படிநிலையாக முன்னேற துடிக்கும் விளையாட்டு வீரர்களின் உச்சக்கட்டம் ஒலிம்பிக் தான்.
சானியா பெருமிதம்
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்த ஒலிம்பிக் போட்டியில் சானியா மிர்ஸா 4வது முறையாக பங்கேற்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒலிம்பிக்கில் விளையாடுவது எந்த ஒரு விளையாட்டு வீரரும் கனவு காணும் ஒன்று. அப்படிப்பட்ட ஒலிம்பிக்கில் நான்கு முறை விளையாடுவது என்பது, எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நான் கண்ட கனவுகளில் ஒன்று. எனவே இது மிகவும் பெருமைக்குரிய விஷயம்" என்று டோக்கியோவுக்குச் சென்றபோது இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.
தவறான வழிநடத்தல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி டென்னிஸ் பிரிவில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அங்கிதா ராணா இணை தகுதிப் பெற்றது. ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா-சுமித் நாகல் இணை தகுதி பெறவில்லை.இது தொடர்பாக கருத்து தெரிவித்த போபண்ணா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்கம் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். காலக்கெடு முடிந்ததால் சுமித் நாகல் மற்றும் தனது விண்ணப்பத்தை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இந்திய டென்னிஸ் சங்கத்தின் தவறான வழிநடத்தலே இதற்கு காரணம் என பதிவிட்டிருந்தார்.
Recommended Video
டென்னிஸ் சங்கம் காட்டம்
அவரது இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்த சானியா, போபண்ணாவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் டென்னிஸில் இந்தியா ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக கூற விவகாரம் பெரிதானது. இதற்கு சற்று காட்டமாக பதில் அளித்த அகில இந்திய டென்னிஸ் சங்கம், சர்வதேச டென்னிஸ் சம்மேளன விதிகளின்படி போபண்ணா தகுதி பெறவில்லை என்றும் சானியாவின் பதிவு அடிப்படை ஆதாரமற்றது என கூறியிருந்தார். இவ்வளவு அமளிதுமளிக்கு மத்தியில் தான் ஒலிம்பிக்கில் இந்தியாவின் டென்னிஸ் 'வொண்டர் வுமன்' சானியா களமிறங்க உள்ளார்.