பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடத்த காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சத்யேந்திர சிங் தங்கப் பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்திய அணியை சேர்ந்த சஞ்சீவ் ராஜ்புத் என்ற வீரர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் காமன்வெல்த் துப்பாக்கி சூடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதற்கு முன் நடந்த தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் சத்யேந்திர சிங் 1,162 புள்ளிகளும், சஞ்சீவ் ராஜ்புத், ஷைன்சிங் ஆகியோர் தலா 1,158 புள்ளிகளும் எடுத்தனர்.
இதையடுத்து அதிக புள்ளிகள் எடுத்த சத்யேந்திர சிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிபோட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டானே சாம்சன் உடன் அவர் மோதினார். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து சத்யேந்திர சிங் ஆதிக்கம் செலுத்தினார்.
சிறப்பாக விளையாடிய சத்யேந்திர சிங் 454.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கமும், சஞ்சீவ் ராஜ்புத் 453.3 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இந்த போட்டி தொடரில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளிப் பதக்கங்கள் வென்றது.