தோஹா : 2030 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் போட்டி போட்டு அனுமதி கோரி உள்ளன.
இவர்களில் எந்த நாடு 2030இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் என்ற முடிவு நவம்பர் 2020இல் எடுக்கப்பட உள்ளது.
ஆசிய ஒலிம்பிக் அமைப்பு ஏப்ரல் 22 வரை 2030 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த விரும்பும் நாடுகள் விண்ணப்பிக்கலாம் என கூறி இருந்தன.
இந்த நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் தங்கள் நாடுகளில் 2030 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த விண்ணப்பம் அனுப்பி உள்ளன.
சவுதி அரேபியா, தனது நாட்டின் தலைநகர் ரியாத்தில் ஆசிய போட்டிகளை நடத்த விண்ணப்பம் அனுப்பி உள்ளது. அதே போல, கத்தார் தன் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடத்த விண்ணப்பம் செய்துள்ளது.
கடந்த 2006இல் தோஹாவில் ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. சவுதி அரேபியா இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தியதில்லை. இந்த முறை தான் முதன் முதலாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த முன் வந்துள்ளது.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற உள்ளது. அதன் பின் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஆய்ச்சி-நகோயா நகரில் நடைபெற உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஒரீரு ஆண்டுகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்படலாம் என கருதப்படும் நிலையில், 2030 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இடம் முடிவு செய்யப்பட உள்ளது.