லாஸ் ஏன்ஜெலஸ் : ஆறு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும், பிரபல அமெரிக்க நீச்சல் வீரருமான ரையன் லோக்டே, அதிகளவு ஐ.வி எனும் ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் 14 மாதங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாரம் நடைபெற இருக்கும் அமெரிக்க அளவிலான தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருந்த ரையன் லோக்டே, தற்போது இந்த ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியதால், அந்த போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அனைத்திற்கும் காரணம், அவர் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படம்.
கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட அந்த புகைப்படத்தில், அவர் ஐ.வி மருந்தை உடலில் செலுத்திக் கொண்டிருந்த காட்சி பதிவாகி இருந்தது. ஐ.வி மருந்து தடை செய்யப்பட்ட மருந்து அல்ல, என்றாலும் அதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
இந்த புகைப்படத்தை கண்ட அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் (USADA), இந்த புகைப்படத்தை வைத்து விசாரணையை துவக்கியது. பின்னர் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ரையன் லோக்டே தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தவில்லை. ஆனால், அவர் 12மணி நேரத்திற்குள், 100 மில்லிக்கும் அதிகமான ஐ.வி மருந்தை, எந்த விதமான மருத்துவ சிகிச்சை அவசியமும் இன்றி பயன்படுத்தியதாக தெரிவித்தது.
அதிகளவில் ஐ.வி ஊக்கமருந்தை பயன்படுத்திய குற்றத்திற்காக, ரையன் லோக்டே மே மாதம் 24 நான்காம் தேதியில் இருந்து (அந்த மருந்தை அவர் பயன்படுத்திய நாள்) கணக்கிடப்பட்டு 14 மாதங்களுக்கு நீச்சல் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தடை குறித்து ரையன் லோக்டே கூறுகையில், "நான் சட்டத்திற்கு புறம்பாக எதையும் உட்கொள்ளவில்லை. அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்தது. அந்த மருந்தை நீங்கள் அனைத்து மருந்து கடைகளிலும் பெறலாம். ஆனால், அதைப் பெற தேவையான விதிகளை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும்" என்றார். ரையன் லோக்டேவின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக, அவர் இந்த மருந்தை எடுத்துக் கொண்டார் என கூறப்படுகிறது.
சர்ச்சைகள் ஒன்றும் இவருக்கு புதிதல்ல. ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது, பிரேசில் காவல்துறை தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக அபாண்டமான பழி கூறினார். உண்மையில் அப்போது ரையன் லோக்டே மது அருந்திவிட்டு ஒரு கேஸ் ஸ்டேஷனில் சிறுநீர் கழித்தும், பொருட்களை சேதப்படுத்தியும் அலும்புகள் செய்தார். அதை விசாரிக்க வந்த பாதுகாவலர்களை, பணம் பறிக்க வந்தார்கள் என பொய் குற்றச்சாட்டு கூறினார். விசாரணையில் உண்மைகள் தெரிந்ததால், இவருக்கு பத்து மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தானே வெளியிட்ட புகைப்படத்தால், பதினான்கு மாதம் தடை பெற்றுள்ளார்.