லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை பிரமாண்ட துவங்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு முன்னதாக இன்று காலையில் ஒலிம்பிக் தீபம் ஏந்தி செல்லும் ஓட்டம் லண்டனில் நடைபெறுகிறது. 32.7 மைல் தூரம் கொண்ட இந்த ஓட்டத்தில் உலகின் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் இந்தியாவில் இருந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிதாப் பச்சனும் கலந்து கொள்ள உள்ளதாக டுவிட்டர் இணையதளத்தில் அவரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
லண்டன் ஒலிம்பிக் தீபம் ஏந்தி செல்லும் ஓட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கு, ஒலிம்பிக் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். நான் லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி செல்வது எனக்கும், நம் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு தருணமாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். மேலும் இசை ஞானி இளையராஜாவின் மெல்லிசையும் ஒலிம்பிக் துவக்க விழாவில் இடம்பெற உள்ளது.
இது குறித்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளேன். இதன் மூலம் இந்திய பின்னணியை கொண்ட பஞ்சாபி இசை, இங்கிலாந்தில் ஒலிக்க உள்ளது. எனது இசை நிகழ்ச்சி, ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவின் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.