புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி, தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் சாம்பியனாக திகழ்ந்தார்.
2005, 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு தேசிய, மாநில, சர்வதேச தடகளப் போட்டிகளில் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்தார்.
2006 டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால், அதன் பிறகு அவருக்கு நடத்தப்பட்ட பாலின சோதனையில், ஆண் தன்மை இருப்பதாகக் கூறி வெள்ளிப் பதக்கத்தை பறிப்பதாக ஆசிய விளையாட்டு வாரியம் கூறியது.
அதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி, தனது கிராமத்திலேயே செங்கல் சூளையில் வேலை பார்த்தார். பின்னர் அவருக்கு தாற்காலிகப் பயிற்சியாளர் பணியை தமிழக அரசு வழங்கியது. அவருக்கு மாதம் ரூ. 5,000 மட்டும் சம்பளமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு மேற்படிப்பு படிக்க மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
கத்தார் நாட்டில் உள்ள தோஹாவில் 2006-இல் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சில காரணங்களால் அப்பதக்கம் பின்னர் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, செங்கல் சூளையில் தினக்கூலியாக சாந்தி வேலை செய்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
தற்போது அவர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெங்களூர் மையத்தில் உள்ள தேசிய விளையாட்டுக் கல்வி நிறுவனத்தில் பயிற்சியாளர் தொடர்பான பட்டய படிப்பு பயில விண்ணப்பம் செய்துள்ளார்.
அவரது ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு கல்வி கற்கும் காலத்தில் தங்குமிடம், விளையாட்டுப் பயிற்சிக்குத் தேவைப்படும் பொருள்கள் உள்ளிட்ட செலவினத்தை எதிர்கொள்வதற்காக தேசிய விளையாட்டு வீரர்கள் நல நிதியில் இருந்து ரூ. 60,500 வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார் ஜிதேந்திர சிங்.