14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் பி பிரிவு போட்டியில் போர்ச்சுகல், டென்மார்க் ஆகியவை மோதின.
ஆட்டத்தின் முதல் பகுதியில் 25-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் பெபோ ஒரு கோல் அடித்தார். அடுத்ததாக 36-வது நிமிடத்தில் ஹெல்டெர் போஸ்டிகா மேலும் ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் 2-வது கோலைப் பெற்றது. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் டென்மார்க் தரப்பில் நிக்லஸ் பதில் கோலடித்தார். இதனால் முதல் பகுதியில் போர்ச்சுகல் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
2-வது பாதி ஆட்டத்தில் டென்மார்க் வீரர்கள் ஆட்டத்தை சமன் செய்ய தொடர்ந்தும் போராடினர். ஆனால் இதற்கு 80நிமிடம் போராடியது டென்மார்க். 80-வது நிமிடத்தில் டென்மார்க்கின் நிக்லஸ் மீண்டும் கோலடித்து சமநிலைக்குக் கொண்டுவந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டம் எப்படி முடியுமோ என்ற விறுவிறுப்பில் இரு அணிகளும் அதிரடியை வெளிப்படுத்தினர். கடைசி 10 நிமிடம் அனலாக இருந்தது. ஆட்டம் முடிவடைய 3-வது நிமிடத்தில் ரொனால்டோ வழக்கம்போல அதிரடியாக பந்தை கடத்தி வர அந்த அணியின் வரேலா கோலடித்தார். அதன் பின்னர் யாரும் கோலடிக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது.
ரொனால்டோ பல முறை கோல் அடிக்க முயற்சித்தும் பலனில்லாமல் போனாலும் வழக்கம்போல பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்திச் செல்லும் அனல் பாணி நேற்றைய ஆட்டத்திலும் எதிரொலித்தது. இதுவே டென்மார்க் அணிக்கு நெருக்கடியையும் உருவாக்கியது.