டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழா திறந்த வெளியில் நடைபெற்றதால், ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த சில வீரர்கள், வீராங்கனைகள் விழாவில் இருந்து எழுந்து சென்றுவிட்டனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவிற்கு 6 பதக்கங்கள் கிடைத்தது. இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்கள் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர்கள் விஜய்குமார் (வெள்ளி), ககன் நரங் (வெண்கலம்), பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வெண்கலம்), மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார் (வெள்ளி), யோகேஷ்வர் தத் (வெண்கலம்), குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (வெண்கலம்) ஆகியோருக்கு டெல்லியில் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு வந்த பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் மேளதாளங்கள் முழங்க, திறந்த ஜீப்பில் அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஹாக்கி மைதானத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட மேடையில் விழா நடைபெற்றது. இதனால் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். மேடையை நோக்கி சென்ற ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கினார். ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சுஷில் குமார் மற்றும் விஜய் குமார் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் வெண்கலப்பதக்கம் வென்ற 4 பேருக்கும் தலா 20 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்கள், நாட்டின் சொத்து. வரும் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 25 பதக்கம் கிடைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். பதக்கம் வென்ற வீரர்களுக்கு இன்னும் பல பாராட்டு விழாக்கள் நடைபெற உள்ளது. நாட்டு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து வாழ்த்துகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட மற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள், மேடையின் அருகே நாற்காலியில் அமர வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு நிழலின்றி, வெயிலில் அமர வைக்கப்பட்டனர். மேலும் சாய்னா நேவாலின் தந்தை ஹர்வீர் சிங் நேவால், தேசிய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சன்னி தாமஸ் உட்பட முக்கிய நபர்களால், விழாவை பார்க்க முடியாத வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது.
பாராட்டு விழாவிற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால், ஊடக துறையினர் செய்தி சேகரிக்க முடியாமல் திணறினர். மேலும் ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், மேடையில் பேசுவது யாருக்கும் புரியவில்லை. இதனால் விழாவிற்கு வந்திருந்த ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகள் அதிருப்தி அடைந்தனர். சில வீரர்கள் பாதி விழாவுடன் வெளியேறினர்.
பாராட்டு விழாவில் அதிருப்தி அடைந்த இந்திய மல்யுத்த வாரிய தலைவர் பிரிஜி பூஷான் ஷரன் சிங் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் வெல்ல கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து பயிற்சி அளிக்கிறோம். அவர்களின் பெற்றோரும், அதற்காக அதிக அளவில் தியாகம் செய்கின்றனர். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய, அவர்களை இங்கே அழைத்து கேவலப்படுத்தி விட்டனர் என்றார்.
பாராட்டு விழாவின் முடிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் திறந்த ஜீப்பில் ஏற்றி இந்திய கேட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஒலிம்பிக் வீரர்கள், போர் வீரர்களின் நினைவு சின்னத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.