படு வேகமாக காரை ஓட்டிய டிரைவர்.. தூங்கிய கொடுமை.. கத்தி எழுப்பித் தப்பிய கவாஸ்கர்!
லண்டன்: சாலையில் போகும்போது அதிலும் வாகனத்தில் போகும்போது நாம் சூதானமாக போனாலும் கூட சுற்றியிருப்பவர்களும் கூட அதே போல இருந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் எமன் எப்போது வந்து வெல்கம் சொல்லி நம்மைக் கூட்டிக் கொண்டு போவான் என்பதை சொல்லவே முடியாது.
அப்படி ஒரு பெரும் அபாயத்திலிருந்து சுனில் கவாஸ்கர் தப்பிப் பிழைத்துள்ளார். சில நொடிகள்தான்.. அந்த சில நொடிகளில் அவரது உயிர் தப்பியுள்ளது.
ஆனால் அந்த சில நொடிகளில் அவரது உயிரைக் காப்பாற்றிய அதே கார் டிரைவர்தான், இந்த விபத்து நேரிடும் வாய்ப்பு ஏற்பட்டதற்கும் காரணமாக இருந்துள்ளார். கெட்டதிலும் ஒரு நல்லது போல அவர் செய்த தவறிலிருந்து அவரே கவாஸ்கர் உள்ளிட்டோரையும் காத்துள்ளார் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

லண்டன் நோக்கி காரில்...
கிரிக்கெட் வர்னணைக்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார் கவாஸ்கர். மான்செஸ்டரில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் கவாஸ்கர், அவரது நம்பர் சந்திரேஷ் படேல், இங்கிலாந்து வர்னணையாளர் மார்க் நிக்கோலஸ் ஆகியோர் ஜாகுவார் காரில் லண்டன் கிளம்பினர்.

கொட்டும் மழையில்.. சிறுத்தையென பாய்ந்த கார்...
அப்போது சரியான மழை. அந்த மழையில் கார் படு வேகமாக லண்டன் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

தூங்கிய டிரைவர்
காரை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென அப்படியே மெதுவாக கண்ணயர்ந்துள்ளார். அதை முதலில் கவாஸ்கர் உள்பட யாருமே கவனிக்கவில்லை.

மின்னல் வேகத்தில்
அப்போது கார் சற்று தடம் மாறி எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவது போல போனபோதுதான் கவாஸ்கர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுக் கத்தியுள்ளார்.

திடுக்கிட்டு விழித்து திருப்பிய டிரைவர்
அவரது சத்தத்தால் டக்கென்று விழித்த டிரைவர், தன் கண் முன்பாக நடக்கவிருந்த அந்த பெரும் விபரீதத்தை நொடி நேரத்தில் சமாளித்து காரை படாரென்று வலது பக்கமாக திருப்பி பெரும் விபத்திலிருந்து தப்பினார்.

காருக்கு சேதம்.. யாருக்கும் காயமில்லை
இந்த விபத்தில் கவாஸ்கர் உள்ளிட்ட அனைவருமே காயமின்றித் தப்பி விட்டனர். ஆனால் கார்தான் பெரும் சேதமடைந்து விட்டது. அதன் பின்னர் ரயிலில் ஏறி லண்டன் போனார்கள் கவாஸ்கரும் மற்றவர்களும்.


Click it and Unblock the Notifications