ஜகார்தா: கலந்து கொண்ட முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார்.
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள அவர், இது வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றதில்லை. அதை பூர்த்தி செய்யும் வகையில், இந்த முறை தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
எனினும், சுஷில் குமார் ஆண்கள் 87 கிலோ பிரீஸ்டைல் பிரிவு முதல் சுற்றில் தோல்வி அடைந்த, காரணத்தால் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். தனது முதல் ஆட்டத்தில், பக்ரைனின் ஆடம் பட்டிரோவ்-ஐ சந்தித்த சுஷில் குமார், 5-3 என தோல்வி அடைந்தார்.
துவக்கத்தில் 2-0 என முன்னிலையில் இருந்த சுஷில், இறுதியில் பின்தங்கினார். ஆடம் பட்டிரோவ் இறுதிக்கு செல்லும் பட்சத்தில், சுஷில் குமார் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆட வாய்ப்புள்ளது.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
மற்ற, மல்யுத்த போட்டிகளின் முடிவுகள் இந்தியாவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. ஆண்கள் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா முதல் போட்டியில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார். உஸ்பெகிஸ்தான் நாட்டின் சிரோஜிடின் காசநோவ்-ஐ 13-3 என வீழ்த்தினார்.
மற்றொரு, இந்திய மல்யுத்த வீரர் சந்தீப் டோமர் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் 12-8 என துர்க்மெனிஸ்தான் நாட்டின் ருஸ்டம் நாசரோவ்-ஐ வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.