டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக முன்னாள் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி மற்றும் அபே சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது ரூ90 கோடிக்கு அரங்கம் அமைத்தது, விளையாட்டுச் சாதனங்கள் வாங்கியது உட்பட பல ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றது என்பது புகார்.
இது தொடர்பாக சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி சுமார் 10 மாத காலம் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் வருடாந்திர பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் அபே சிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் 2011-2012 ம் ஆண்டில் தலைவராக இருந்த விஜயகுமார் மல்கோத்ரா ஆயுட்கால தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.