சென்னை : காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 4வது முறையாக தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் 2018 காமன்வெல்த் போட்டிக்கு தமிழக பளூதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தகுதி பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்களுக்கான 77 கிலோ எடை பிரிவில், தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம், ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோவும், க்ளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் 172 கிலோ என மொத்தமாக 320 கிலோ எடை தூக்கி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
தங்கம் வென்றதன் மூலம், 2018ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு, சதீஷ் குமார் தகுதி பெற்றுள்ளார். அதே போல் மற்றொரு இந்தியரான ராகுல் வெங்கட்ராமும் தங்கம் வென்று 2018 காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதே போன்று பெண்கள் பிரிவில் நிருபமா தேவி மற்றும் நிகீதா கேல் ஆகிய இந்திய வீராங்கனைகளும் தங்கம் வென்றனர்.
வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் ஏற்கனவே 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர். தொடர்ந்து நான்காவது முறையாக காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ள சதீஷ், இதற்காக தன்னுடைய பெற்றோர், பயிற்சியாளர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு முகநூல் பக்கத்தில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.