மன உறுதியே மூலதனம்
சத்தான உணவு, போட்டிகளில் போட்டுக் கொண்டு ஓடக்கூடிய ஷூ என எதுவும் இல்லை என்றால் என்ன? தன்னிடம் இருந்த மன உறுதியை மூலதனமாக்கிக் கொண்ட சாந்தி எந்தவிதமான குறைபாடுகளுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து தடகள போட்டிகளில் கலந்து கொண்டார்.
கத்தாரில் கெத்து
2006ம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகரம் தோகாவில் நடைபெற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி. இந்தியா சார்பில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சாந்தி, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அந்த நாள் தமிழகத்தின் முக்கியமான நாளானது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்ப் பெண் வெள்ளிப்பதக்கம் வென்றது வரலாற்றில் முதல் முறையும் அந்த நன்னாள்தான்.
வெற்றியைக் காண டிவி கூட இல்லை
அவர் பெற்ற வெற்றியைக் கூட அவரது குடும்பத்தினரால் காண முடியவில்லை. வறுமையின் காரணமாக அவர்கள் வீட்டில் டிவி இல்லை. இந்த வெற்றிக்காக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி சாந்திக்கு டிவி மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கிக் கௌரவப்படுத்தினார்.
மகிழ்ச்சிப் பின் அவமானம்
மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் சாந்தியும் அவரது குடும்பத்தினரும் மூழ்கி இருக்க, பாலின பரிசோதனை என வந்தது ஆபத்து. பரிசோதனை என்ற பெயரில் சாந்தி கொடும் அவமானத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
பதக்கம் பறிப்பு
இதனைத் தொடர்ந்து சாந்தியிடம் இருந்து வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது. சர்வதேச அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்ற சாந்தி கிராமத்தோடு முடக்கப்பட்டார்.
சூளையில் வேலை
ஏற்கனவே வறுமை துரத்திய சாந்திக்கு மேலும் மேலும் சிக்கல் அதிகமானது. இதனால், சாந்தி தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க செங்கல் சூளையில் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்றாலும் செங்கல் சூளைதான் அவருக்குச் சோறு போட்டது.
எதிர் நீச்சல்
ஒருபக்கம் பறிக்கப்பட்ட பதக்கத்தை மீண்டும் பெற போராட்டத்தைத் தொடர்ந்த சாந்தி, வறுமையைப் போக்க தமிழக அரசிடம் வேலைக்கு விண்ணப்பித்தார். அதுவும் உடனடியாக கிடைத்தபாடில்லை. 10 ஆண்டுகள் போராடினார். இறுதியாக, தற்காலிகமாக வேலை வழங்கிய தமிழக அரசு அதனை நிரந்தர பணியாக்கி உத்தரவிட்டது.
பயிற்சியாளராக..
தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நேரு விளையாட்டு அரங்கில் தடகள பயிற்சியாளராக உள்ள சாந்தி தன்னைப் போன்றே ஏழ்மையில் உழலும் பலருக்கு, அதே மனபலத்தோடு பயிற்சி அளித்து வருகிறார்.
பதக்கத்தை மீட்க..
அதே நேரத்தில் பறிக்கப்பட்ட பதக்கத்தையும் மீட்கச் சாந்தி போராட்டம் நடத்தி வருகிறார். பதக்கத்தை மீட்க அவரது போராட்டத்திற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும். அப்போதுதான், சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற மாணிக்கங்களால் பல தங்கங்களைப் பெற முடியும்.