சென்னை: ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் அடுத்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தகுதிச்சுற்றுகள் கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆடவர் 400 மீ. தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் திருப்பூரைச் சேர்ந்த அய்யாசாமி தருண் , திருச்சியைச் சேர்ந்த ஆரோக்ய ராஜீவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் அய்யாசாமி தருண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் ஊராட்சி, ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 2012-14ம் ஆண்டுகளில் நடந்த மாநில தடகளப் போட்டிகளில் 200 மீ. மற்றும் 400 மீ. ஓட்டங்களில் தொடர்ந்து மூன்றாண்டுகள் தங்கம் வென்றுள்ளார்.
2014-இல் மாநில தடகளப் போட்டியில் 200 மீ. ஓட்டத்தில் 21.4 விநாடிகளிலும், 400 மீ. ஓட்டத்தில் 48.6 விநாடிகளிலும் இலக்கை கடந்து சாதனை படைத்தார் தருண்.
மாநில அளவில் 8 சாதனைகளையும், தேசிய அளவில் 6 சாதனைகளையும் படைத்துள்ள தருண், தேசிய அளவில் 40 பதக்கங்களை வென்றுள்ளார். 2016-இல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தருண் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கமும், 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கமும் வென்றுள்ளார்.
இதேபோல், ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கும் மற்றொரு தமிழரான ஆரோக்ய ராஜீவ், திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர். தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் ஆரோக்ய ராஜீவ், 2014-இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இவர் ஆரம்பத்தில் நீளம் தாண்டுதல் வீரராக இருந்து பின்னர் ஓட்டப் பந்தயத்துக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.