புனே: புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தபோதும், 6 அணிகள் மோதும் பிளே ஆப் சுற்றுக்கு யுபி யோத்தா அணி முன்னேறியது.
புரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகளில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில், 6 அணிகள் அடுத்தச் சுற்றான பிளே ஆப் போட்டிகளில் விளையாட உள்ளன.
இதில் ஏ பிரிவில் இருந்து குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பல்தான் அணிகளும் பி பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், பட்னா பைரேட்ஸ் அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியிடம் 36-30 என்ற கணக்கில் தோற்ற போதும், 21 போட்டிகளில் 8 வெற்றி, 9 தோல்வி, 4 டையுடன் 60 புள்ளிகளைப் பெற்று, யுபி யோத்தா அணி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று இரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 34-31 என தபாங்க் டெல்லி அணியை வென்றது. இந்தத் தொடரில் அதிக தோல்வி அடைந்த அணியாக, தமிழ் தலைவாஸ் அணியை பின்னுக்கு தள்ளியது தபாங்க் டெல்லி அணி. தமிழ் தலைவாஸ் 6 வெற்றி, 14 தோல்விகளைக் கண்டது. அதே நேரத்தில் தபாங்க் டெல்லி அணி 5 வெற்றி, 16 தோல்விகளைக் கண்டது.
நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், பி பிரிவில் புள்ளிப் பட்டியில், 5வது இடத்துக்கு பெங்களூரு புல்ஸ் முன்னேறியது. தமிழ் தலைவாஸ் கடைசி இடத்தில் உள்ளது. பெங்களூரு புல்ஸ் இன்னும் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்க உள்ளது.
வரும் 20ம் தேதி வரை முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. 23ம் தேதி முதல், பிளே ஆப் சுற்று போட்டிகள் நடக்கின்றன.