சென்னை: இந்திய கிரிக்கெட்டில் தற்போது சீனிவாசனின் கை தாழ்ந்து போய் விட்டது. இதனாலும் கூட தமிழகத்திலிருந்து இரண்டு பேர் கூட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் முரளி விஜய்யை உள்ளே நுழைத்து விட்டிருப்பார் என்று பேசிக் கொள்கிறார்கள்.
மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் சிலர் சிக்கியதைத் தொடர்ந்து வாரியத் தலைவர் பதவியிலிருந்து சீனியை உச்சநீதிமன்றம் தூக்கி ஓரமாக வைத்து விட்டது. இதனால் தற்போது சீனிவாசன் கையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இல்லை.
சீனிவாசன் இருந்தவரை இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்களின் தலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. திணேஷ் கார்த்திக் நடமாடிக் கொண்டிருந்தார். அஸ்வின் நங்கூரமிட்டு நிலைத்த இடத்தைப் பிடித்தார். ஹர்பஜன் நிரந்தரமாக ஓரம் கட்டப்பட அஸ்வினுக்கு தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளே முக்கியக் காரணம். அதை அவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். சீனியின் ஆசியும் இதற்கு ஒரு காரணமாக சொல்லலாம்.
சமீப காலமாக முரளி விஜய் அதிக அளவில் இந்திய அணியில் இடம் பெற்று வந்தார். அதற்கு கேப்டன் டோணியின் அன்புப் பார்வையும் கூட ஒரு காரணமாக அமைந்தது. டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஐபிஎல் போட்டிகளில் அசத்திய முக்கிய வீரராக வலம் வந்தவர் முரளி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது சீனிவாசன் லைம்லைட்டில் இல்லை. இதனால் போகஸ்லைட் முரளி விஜய் மீது வலுவாக விழாமல் போய் விட்டது. ஒரு வேளை சீனிவாசன் பொறுப்பில் இருந்திருந்தால், முரளி விஜய்யின் நல்ல பார்மைக் காரணம் காட்டி அவருக்காக ஏதாவது ஒரு வகையில் குரல் கொடுத்திருக்கக் கூடும். முரளிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடும்.