17 வயது ரித்திகா
17 வயதுதான் ஆகிறது ரித்திகாவுக்கு. கீதா, பபிதா ஆகியோரின் சித்தி மகள். ஹரியானாவில் உள்ள தனது உறவினரான மகாவீர் பொகட் நடத்தும் விளையாட்டு அகாடமியில்தான் பயிற்சி பெற்று வந்தார் ரித்திகா. கடந்த நான்கு வருடமாகவே மகாவீர் சிங்கின் வீட்டில்தான் தங்கிப் பயிற்சியும் பெற்று வந்தார். இந்த வீடு பலாலி கிராமத்தில் உள்ளது.
தாங்கிக்க முடியாத தோல்வி
சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட அவர் இறுதி ஆட்டத்தில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த நிலையில்தான் அவரது தற்கொலை மார்ச் 17ம் தேதி நடந்தேறியது. தற்கொலைக் கடிதம் எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை. ஆனால் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்த முடிவுக்கு அவர் செல்ல காரணமாக கூறப்படுகிறது.
நம்பவே முடியவில்லை
ரித்திகா குறித்து கீதா பொகட் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், எனது தங்கை ரொம்ப திறமையானவள். என்னால் இதை நம்பவே முடியவில்லை. அவளை எங்களால் மறக்கவே முடியாது.. அவள் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று உடைந்து போய் கதறி அழுகிறார் கீதா பொகட். மேலும் அவர் கூறுகையில்,எனது குடும்பமே நிலை குலைந்து போய் நிற்கிறது. அனைவருமே துயரத்தில் உள்ளோம் என்றார் கீதா.
மன நலம் முக்கியம்
விளைாட்டு வீரர்களின் உடல் ஆரோக்கியம், அதன் பிட்னஸ் குறித்துத்தான் இப்போது பலரும் கவலைப்படுகிறார்களே தவிர அவர்களின் மன நலன் குறித்து யாரும் பெரிதாக அக்கரை காட்டுவதில்லை என்ற கருத்து வலுத்துள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் ரித்திகாவின் மரணம் வந்து சேர்ந்துள்ளதாக மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள்.
மனப் பக்குவம் தேவை
வெற்றியோ தோல்வியோ அதை ஒரே மாதிரி பக்குவத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் அறிவுரையாக உள்ளது. வெற்றி வந்தால் கொண்டாடுங்கள். தோல்வி வந்தால் அதிலிருந்து கற்றுக் கொண்டு அடுத்த முறை வெல்ல அதைப் பயன்படுத்துங்கள் என்பதே இவர்களின் ஆலோசனையாக உள்ளது. வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் மனதை ஸ்திரமாக வைத்துக் கொள்ள உரிய கவுன்சிலிங்குகள் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் தோல்வியுற்றால் அல்லது சரியாக செய்யாமல் போனால் அவர்களைத் தட்டிக் கொடுத்து ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மன ஆறுதல் தேவை
சமீபத்தில் கூட இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டி20 போட்டியின்போது கடைசி ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். அதுவரை நன்றாக வீசி வந்த அவர் கடைசி ஓவரில் பதட்டமாகி விட்டார். 2 தேவையில்லாத ஒய்டு போட்டார். ஆனால் கடைசியில் தட்டுத் தடுமாறி அந்த ஓவரில் இங்கிலாந்தைத் தடுத்து நிறுத்தி வெற்றியைப் பெற்றுக் கொடுத்து விட்டார். அப்போது எல்லோரும் போட்டியில் ஜெயித்த மகிழ்ச்சியில்தான் இருந்தனர். ஆனால் ஒரே ஒரு வீரர் மட்டும் ஷர்துலைப் பற்றிக் கவலைப்பட்டார். அவர்தான் ஹர்டிக் பாண்ட்யா.
துயரத்தில் துணை இருங்கள்
பெவிலியனுக்குப் போன அவர் அங்கிருந்து திரும்ப மைதானத்துக்குள் ஓடி வந்தார் நேராக ஷர்துலிடம் சென்றார். அவரைக் கட்டிப்பிடித்தார். தட்டிக் கொடுத்தார். அது சாதாரண விஷயம்தான்.. ஆனால் அதில் எத்தனை செய்திகள் இருக்கின்றன தெரியுமா.. நீ நல்லா பண்ணிருக்கே.. தடுமாறினாலும் கூட கடைசியில் வெற்றியைப் பெற்றுத் தந்து விட்டாய்.. ரிலாக்ஸ் என்று கூறிய ஆறுதல் அது.. அதுதான் தடுமாறும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய ஆதரவாகும். அதைத் தரும்போது நிச்சயம் தளர்வடைந்த நிலையில் இருக்கும் எவருமே உற்சாகம் பெறுவார்கள். இது ரித்திகாவுக்கும் கிடைத்திருந்திருக்க வேண்டும்.. துரதிர்ஷ்டவசமாக அது கிடைக்காமல் போயிருந்திருக்கலாம்.. !