ஒலிம்பிக் கனவு தகர்ந்தது... இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவிற்கு 4 ஆண்டுகள் தடை... ‘வாடா’ உத்தரவு
டெல்லி: இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவிற்கு நான்கு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் ('வாடா') தடை விதித்துள்ளது. இதனால் நரசிங்கின் ஒலிம்பிக் கனவு தகர்ந்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் (26). இவர் கடந்தாண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 74கி பிரிவில் வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
ஆனால், ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நரசிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவர் மெட்டாடியனன் என்ற ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது.

சதி...
ஆனால், இது சதி எனவும், தனக்கு தெரியாமல் தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஊக்கமருந்தைக் கலந்ததாகவும் நரசிங் வாதாடினார். அதன் தொடர்ச்சியாக நாடா அவருக்கு ஒலிம்பிக்கில் விளையாட அனுமதி அளித்தது. இதனால் ரியோ சென்று ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி அவர் போட்டிகளுக்கு தயாராகி வந்தார்.

முறையீடு...
இந்நிலையில், 'நாடாவின்' முடிவை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் ('வாடா') எதிர்த்தது. நரசிங் பங்கேற்பு குறித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டது.

விசாரணை...
இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், நரசிங் சார்பில் அவரது வழக்கறிஞர் விடுஸ்பத் சிங்கானியா வாதாடினார்.

தடை...
இந்த விசாரணையின் முடிவில் நரசிங் நான்கு ஆண்டுகள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க தடை விதித்து வாடா உத்தரவிட்டது.

ஒலிம்பிக் கனவு...
இதனால், இன்று நடைபெறவுள்ள ஆடவர் 74 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் நரசிங் பங்கேற்க இயலாது. இதனால் அவரது ஒலிம்பிக் கனவு கை நழுவிப் போகிறது. உடனடியாக அவரை ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications