நியூயார்க்: கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட போட்டியின்போது உருகுவேக்கு பதில் சிலி நாட்டு தேசிய கீதம் தவறாக ஒலிபரப்பானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிலி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட போட்டி அமெரிக்காவில் கடந்த 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோ மற்றும் உருகுவே அணிகள் மோதிய ஆட்டம் நடந்தது.
போட்டி துவங்கும் முன்வு மெக்சிகோ மற்றும் உருகுவே நாட்டு தேசிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது உருகுவே நாட்டு தேசிய கீதத்திற்கு பதில் சிலி நாட்டு தேசிய கீதம் ஒலிபரப்பானது.
இதை கேட்ட உருகுவே அணி வீரர்கள் வியந்தனர். இந்த தவறுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உருகுவே மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மேலும் இது போன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்தனர்.
இந்த போட்டியில் உருகுவே மெக்சிகோவிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.