
27ம் தேதி முதல் துவக்கம்
ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி, கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் தொடரில் மார்க்கெட்டா வொண்ட்ரூசோவாவை எதிர்த்து நேரடி செட்களில் வெற்றி கண்டு, கோப்பையை கைகொண்டார். இதன்மூலம் நம்பர் ஒன் இடத்தையும் இதுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களை பரிசாக கொடுத்துவரும் இவர் கடந்த ஆண்டில் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெற்றி கொண்டார்.

பிரெஞ்ச் ஓபனில் விலகல் முடிவு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நியூயார்க்கில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் தொடரில் பங்கேற்க முடியாது என்று கடந்த ஜூலை மாத இறுதியில் அறிவித்தார் பார்டி. இந்நிலையில் தற்போது வரும் 27ம் தேதி துவங்கவுள்ள பிரெஞ்ச் ஓபன் தொடரிலும் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளார். நடப்பு சாம்பியனான அவரின் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினர் நலன் முக்கியம்
இந்த முடிவை எடுப்பது தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும் ஆனால், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் அணியின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பார்டி மேலும் கூறினார். கொரோனா பரவல் மற்றும் அதன் காரணமாக தன்னுடைய கோச்சிடம் பயிற்சி பெற முடியாமை போன்ற காரணங்களால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்நோக்கியுள்ள பார்டி
இந்நிலையில், வரும் ஜனவரியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள தன்னுடைய சொந்த நாட்டின் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் தான் கண்டிப்பாக பங்கேற்று விளையாடுவேன் என்று பார்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற கத்தார் ஓபன் போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











