லண்டன்: 17 ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ், ஜாம்பவான் ரோஜர் பெடரரை முந்தி புதிய சாதனைப் படைத்துள்ளார்.
டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டி துவங்கியுள்ளது. 9வது முறையாக விம்பிள்டன் கோப்பையை வெல்லும் முனைப்பில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் களமிறங்கிய தரவரிசையில் 70வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ், முதல் சுற்று ஆட்டத்தை வென்றார். இதன் மூலம், ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்தார்.
தொடர்ந்து அதிக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்ற சாதனையை ரோஜர் பெடரர் வைத்திருந்தார். பெடரர் தொடர்ந்து 65வது முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். விம்பிள்டனில் களமிறங்கியதன் மூலம் அந்த சாதனையை லோபஸ் முறியடித்தார்.
2001ல் பிரெஞ்ச் ஓபனில் களமிறங்கிய லோபஸ், இதுவரை எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியையும் மிஸ் செய்ததில்லை. இந்த விம்பிள்டன் அவர் பங்கேற்கும் 66வது கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும். இதுவரை எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் அரை இறுதிக்கு லோபஸ் நுழைந்ததில்லை. உலகத் தரவரிசையிலும் டாப் 10க்குள் வந்ததில்லை.
ரோஜர் பெடரருடன் இதுவரை 13 முறை விளையாடியுள்ளேன். அனைத்திலும் தோல்வியே அடைந்துள்ளேன். முதல் முறையாக அவரை வெற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருடைய சாதனையை முறியடித்ததே மிகப் பெரிய வெற்றி என்று லோபஸ் கூறியுள்ளார்.