இந்த ஆண்டில் ஓய்வு
டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த வீரர் லியாண்டர் பயஸ், இந்த ஆண்டு இறுதியில் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் டேவிஸ் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்ட லியாண்டர் பயஸ் தற்போது 6 பேர் கொண்ட குழுவில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து அவர் குரோசியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்று ஆடவுள்ளார்.
இந்திய அணி அறிவிப்பு
இந்த ஆண்டிற்கான டேவிஸ் கோப்பை தொடருக்கான 6 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மூத்த வீரர் லியாண்டர் பயசுடன், பிரஜ்னேஷ் குணேஷ்வரன், சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், ரோஹன் போபண்ணா, திவிஜ் ஷரண் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த குழுவில் விளையாடாத கேப்டனாக ரோகித் ராஜ்பால் பொறுப்பேற்றுள்ளார்.
மார்ச் 6 & 7 தேதிகளில் நடைபெறுகிறது
குரோசியாவில் வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை போட்டிகளில் இந்த வீரர்கள் பங்கேற்று அந்த அணியுடன் விளையாடவுள்ளனர். தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணி வேர்ல்டு குரூப் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
பங்கேற்ற ராஜ்பால், லியாண்டர்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில் விளையாட இந்தியாவின் முன்னிலை வீரர்கள் மற்றும் கேப்டன் மகேஷ் பூபதி ஆகியோர் மறுப்பு தெரிவித்த நிலையில், அணியின் கேப்டனாக ரோகித் ராஜ்பால் மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் பங்கேற்று சிறப்பாக ஆடினர்.
"நம்பிக்கை வைத்துள்ளது பெருமை"
இந்நிலையில் இந்த ஆண்டு டேவிஸ் கோப்பைக்காக தலைமையேற்று அணியை வழிநடத்தவுள்ள ரோகித் ராஜ்பால் கூறுகையில், அனைத்திந்திய டென்னிஸ் அசோசியேஷன் தன்மீது நம்பிக்கை வைத்து இந்த ஆண்டும் கேப்டன் பதவியில் நீடிக்க கேட்டுக் கொண்டுள்ளது தனக்கு பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீரர்களின் உதவியுடன் உயரங்களை தொட தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலிமையான குரோசியா அணி
தற்போது இந்திய அணி வீரர்கள் மோதவுள்ள குரோசியா அணி மிகவும் வலிமை வாய்ந்த அணி, இவர்கள் கடந்த 2018ல் கோப்பையை வென்றவர்கள் என்பதுடன் அந்த அணியில் உலகத்தர வீரர்கள் உள்ளனர். இந்நிலையில், எத்தகைய நெருக்கடிகளையும் சந்தித்து வெற்றி பெறும் வல்லமை வாய்ந்த இந்திய டென்னிஸ் வீரர்கள், குரோசியாவையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள் என்றும் ராஜ்பால் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்குழு அறிவிப்பு
டேவிஸ் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள் குழுவில் 6 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன் உள்ளிட்டோர் விளையாடவுள்ளனர். இதேபோல இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் விளையாட உள்ளனர். இதையடுத்து போட்டியின் நெருக்கத்தில் 5 பேர் கொண்ட குழுவும் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.