மாஸ்கோ: பிரபல டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவாக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக் காலத்தை 15 மாதங்களாக குறைத்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடைபெற்றது. மரியா ஷரபோவாவிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியை சோதனை செய்தபோது அவர் மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் 2 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்படுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. உடல்நலனில் பிரச்சினைகள் இருந்ததால் மெல்டோனியம் என்ற மருந்தை உட்கொண்டு வந்ததாகவும் இந்த மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது பற்றி தமக்கு தெரியாது என்றும் ஷரபோவா விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை தடையை நீக்க வேண்டும். இல்லையெனில் தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையடுத்து அவர் மீதான தடை காலத்தை இரண்டு ஆண்டுகள் என்பதில் இருந்து 15 மாதங்களாக குறைத்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.