ரபேல் நடால் ரோஜர்ஸ் கப் இறுதியில் வெற்றி.....பெண்கள் பிரிவில் ஹாலெப் வென்றார்
டொரோண்டோ : கனடாவின் டொரோண்டோ நகரில் நடந்து வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிகள் நேற்று நடைபெற்றன. அதன் முடிவில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரோமானியாவின் சைமோனா ஹாலெப் வெற்றி பெற்றனர்.

அனுபவ நடால் vs. இளம் சிட்சிபாஸ்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நடால், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான சிட்சிபாஸோடு மோதினார். சிட்சிபாஸ்-இன் பிறந்தநாள் அன்று இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எனினும், நடால் 6-2, 7-6(4) என இரண்டே செட்களில் வெற்றியை தக்க வைத்தார்.
நடால் எந்த சிரமுமின்றி இறுதிப் போட்டியில் வெற்றியை பெற்று பட்டத்தை வென்றார். இது நடாலின் நான்காவது ரோஜர்ஸ் கோப்பை பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு சேர்த்து மொத்தம் 80 டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ளார் நடால்.
டாப் டென்-ஐ சிதறடித்த சிட்சிபாஸ்
முன்னதாக இந்த தொடரில், இருபது வயது இளம் வீரர் சிட்சிபாஸ் தரவரிசையில் முதல் பத்து இடத்தில் இருக்கும் வீரர்களான டொமினிக் தியம், நோவாக் ஜோகோவிக் மற்றும் அலெக்சாண்டர் சிவேர்வ் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், விம்பிள்டனில் இரண்டாம் இடம் பிடித்த கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
மீண்டும் மோதிய ஹாலெப் vs. ஸ்டீபன்ஸ்
பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்த ஆண்டு துவக்கத்தில் பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதியில் மோதிய ஹாலெப் - ஸ்டீபன்ஸ், மீண்டும் ஒரு இறுதிப்போட்டியில் சந்தித்ததால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த போட்டி. சுமார் இரண்டு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், ஹாலெப் 7-6 (8/6), 3-6, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார். ஹாலெப்-புக்கு இது இரண்டாவது ரோஜர்ஸ் கோப்பை பட்டம் ஆகும்.
ரபேல் நடால் மற்றும் சைமோனா ஹாலெப் இருவரும் ஆண்கள் மற்றும் பெண்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, August 13, 2018, 15:38 [IST]
Other articles published on Aug 13, 2018


Click it and Unblock the Notifications