டொரோண்டோ : ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான நோவாக் ஜோகோவிக், ரபேல் நடால் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
கனடாவின் டொரோண்டோ நகரில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர்கள் ஆடி வரும் இந்த தொடரில், இரண்டு சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரபேல் நடால், பிரான்சின் பென்வா பெர்-ஐ (Benoit Paire) 6-2, 6-3 என வீழ்த்தினார். இந்த ஆண்டின் விம்பிள்டன் பட்டத்தை வென்று பார்முக்கு திரும்பி இருக்கும் ஜோகோவிக், கனடாவின் பீட்டர் பொலான்ஸ்கி-ஐ 6-3, 6-4 என வீழ்த்தினார்.
தனது வெற்றிக்கு பிறகு பேசிய நடால், "நான் இன்று நூறு சதவீதத்தில் இல்லை. கடந்த ஐந்து நாட்களாக நான் இங்கே நல்ல பயிற்சி மேற்கொண்டேன். அதே சமயம், என் நாட்டில் கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த முதல் போட்டியின் வெற்றி எனது நம்பிக்கையை மீட்க மிகவும் முக்கியம். முக்கியமாக நாளை எனக்கு முக்கிய போட்டி இருக்கிறது" என கூறினார். மூன்றாவது சுற்றில் மற்றொரு முன்னணி வீரரான வாவ்ரின்காவை சந்திக்க உள்ளார் நடால்.
ஜோகோவிக் தனது வெற்றிக்கு பின் பேசுகையில் டென்னிஸ் தொடர்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "ஷாட் கிளாக்" முறை குறித்து பேசினார். "இப்போது அதிக நேரம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில், நாற்காலியில் இருக்கும் நடுவர் ஸ்கோர் சொன்னவுடன் ஷாட் கிளாக் நேரம் குறையத் துவங்குகிறது. முன்பு சிலசமயம், நீண்ட நேர களப்பரிமாற்றமாகவோ, நல்ல ஆட்டமாகவோ இருந்து, மக்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், நடுவர் ஸ்கோர் கூறிய பின் அதிக நேரம் எடுக்கும். எனக்கு இது வசதியாகவே உள்ளது" என தெரிவித்தார். ஜோகோவிக் மூன்றாவது சுற்றில் கிரீசின் சிட்சிபாஸ்-ஐ சந்திக்க உள்ளார்.
முன்னதாக, இந்த தொடரில் இருந்து உலகின் முன்னணி வீரர்களானன ரோஜர் பெடரர், ஆண்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் விலகினர்.