டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியின் இரட்டைப் பிரிவு டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸுடன் இணைந்து போபண்ணா விளையாடுவார் என அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. லியாண்டர் பயஸ் பங்கேற்க உள்ள 7வது ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.
ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் வீரர்கள் பட்டியலை அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனுபவ வீரர் லியாண்டர் பயஸுடன் இணைந்து போபண்ணா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போபண்ணா ஏற்கனவே டென்னிஸ் சம்மேளனத்துக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், சாகேத் மைனெனியுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் பங்கேற்று விளையாடுவதற்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை டென்னிஸ் சம்மேளனம் நிராகரித்து பயசுடன் இணைந்து ஆட பரிந்துரைத்துள்ளது.
இதபோல, கலப்பு இரட்டை பிரிவில் போபண்ணா, சானியா மிர்சாவுடன் இணைந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, பிராத்தனா தாம்ப்ரேவுடன் இணைந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போபண்ணா மட்டுமின்றி கடந்த காலங்களில், மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஆகியோரும், லியாண்டருடன் ஆட தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறியவர்கள்தான் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக லியாண்டர் பயஸ் பங்கேற்றார். கடந்த 1996ம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் லியாண்டர் பயஸ். ரியோ ஒலிம்பிக், அவர் பங்கேற்க உள்ள 7வது ஒலிம்பிக் போட்டியாகும்.