ஷாங்காய்: டென்னிஸ் உலகின் டாப் பிளேயர்களான ரோஜர் பெடரரும், ரபேல் நாடாலும் மோதிக் கொண்ட ஷாங்காய் இறுதிச் சுற்றில் தற்போது ரோஜர் பெடரர் வெற்றி பெற்றுள்ளார். மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் கொஞ்சம் கூட ரபேல் நடாலுக்கு இடம் கொடுக்காமல் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கோப்பை. இது உலகின் முக்கியமான டென்னிஸ் கோப்பை போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். பொதுவாக இந்தப் போட்டியில் இரட்டையர்கள் சாம்பியன், ஒற்றையர் சாம்பியன் என்ற இரண்டு கோப்பைகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வருடத்திற்கான ஒற்றையர் சாம்பியன்ஸ் ஷிப் போட்டி இன்று காலை தொடங்கியது. டென்னிஸ் உலகின் ஆண்கள் பிரிவின் டான்கள் என்றழைக்கப்படும் ரோஜர் பெடரரும், ரபேல் நடாலும் இந்தப் போட்டியில் மோதிக் கொண்டனர். மிகவும் கடினப்பட்டு இறுதிப் போட்டிக்கு நுழைந்த இந்த இருவரின் இறுதி ஆட்டத்தைக் காண மொத்த டென்னிஸ் உலகமே காத்திருந்தது.
ஏற்கனேவே இருவரும் மோதிக் கொண்டுள்ள ஆட்டங்களில் எல்லாம் ரோஜர் பெடரரே அதிக போட்டிகளில் வென்று இருக்கிறார். 38வது முறையாக இருவரும் மோதிக் கொள்ளும் இந்த ஆட்டம், ஷாங்காய் இறுதிப் போட்டியாக வேறு இருந்ததால் தொடக்கத்தில் இருந்து இந்த போட்டி அனல் பறக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் ஆரம்பத்திலே சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய ரோஜர் பெடரர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். 6-4, 6-3 என்ற முதல் இரண்டு செட்களிலேயே தன்னுடைய மொத்த திறமையையும் வெளிப்படுத்தி ரபேல் நடாலை மிகவும் எளிமையாக வென்றார் ரோஜர் பெடரர். ரபேல் நடாலை வென்றதன் மூலம் ரோஜர் பெடரர் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டைட்டிலை வென்றுள்ளார்.