ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி...அமெரிக்க ஓபன் டென்னிஸ் 4-ஆம் சுற்றில் ஆஸ்திரேலிய வீரரிடம் தோல்வி
நியூயார்க் : ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மில்மேனிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
இதுவரை தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் டென்னிஸ் வீரர்களை வீழ்த்தாத மில்மேன், முதல் முறையாக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பெடரரை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியாவின் சார்பில் 2006க்கு பின் முதல் முறையாக அமெரிக்க ஓபன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் மில்மேன். காலிறுதியில், மற்றொரு முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிக்கை சந்திக்க உள்ளார் மில்மேன்.
இன்று நடந்த அமெரிக்க ஓபன் நான்காம் சுற்றுப் போட்டியில், பெடரர் - மில்மேன் மோதினர். முதல் செட்டை பெடரர் எளிதாக 6-3 என கைப்பற்றினார். ஆனால், அடுத்த சுற்று சற்று போராட்டமாக மாறியது. மில்மேன் போராடி 7-5 என இரண்டாம் செட்டை கைப்பற்றினார்.
ரோஜர் பெடரர் இந்த போட்டியில் அதிக தவறுகள் செய்தார். அதன் விளைவாக அடுத்த இரண்டு செட்களும் இருவரும் மாறி, மாறி புள்ளிகளைப் பெற்றனர். எனினும், மில்மேன் அடுத்த இரண்டு செட்களை 7-6, 7-6 என வென்றார்.
ரோஜர் பெடரர் களத்தில் தன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே சமயம், மில்மேன் தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
ரோஜர் பெடரர் விம்பிள்டன் ஓபனிலும் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து காலிறுதியோடு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications