புதிய சாதனையை நோக்கி பெடரர்
பெடரர் நான்கு சுற்று போட்டிகளை வென்று தனது பதினாறாவது விம்பிள்டன் காலிறுதிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். நான்காவது சுற்று போட்டியில், பிரான்சின் அட்ரியனை சந்தித்தார். முதல் செட்டை 6-0 என்ற கணக்கில், பதினாறே நிமிடங்களில் கைப்பற்றிய பெடரர், அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றார். தற்போது தொடர்ந்து 32 செட்களை கைப்பற்றியுள்ள பெடரர், இன்னும் மூன்று செட்களை தொடர்ந்து வெல்லும் பட்சத்தில் தன் முந்தைய சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைப்பார்.
ஏழு வருட கண்டத்தை தாண்டிய நடால்
மறுபுறம், ரபெல் நடால் நான்காம் சுற்றில் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை 6-3, 6-3, 6-4, என்ற நேர் செட்களில் வென்றார். நடால் கடந்த ஏழு ஆண்டுகளில் நான்காம் சுற்றை தாண்டி காலிறுதிக்குள் நுழையவில்லை. அந்த வகையில் நடால், ஒரு கண்டத்தை கடந்து விட்டார். அது குறித்து கூறுகையில், "இது முக்கியமான வெற்றி. 2011இல் இருந்து நான் விம்பிள்டன் காலிறுதிக்குள் நுழையவில்லை. எனவே, இது மிகவும் முக்கியமான தருணம்" என்று குறிப்பிட்டார்.
மல்லுக்கு வரும் ஜோகோவிக் :
இவர்கள் இருவருக்கும் போட்டியாக மற்றொரு புறம் ஜோகோவிக் நான்கு வெற்றிகளுடன் காலிறுதிக்கு வந்துள்ளார். இவர் மூன்று முறை விம்பிள்டன் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஜோகோவிக் மற்றும் நடால் காலிறுதியில் வெல்லும் பட்சத்தில், இருவரும் அரையிறுதியில் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். கண்டிப்பாக, அது ஒரு முக்கியமான ஆட்டமாக இருக்கும். அந்த கண்டத்தை தாண்டினால் மட்டுமே, நடால் இறுதியில் நுழைய முடியும்.
இறுதிப் போட்டியில் மோதப் போவது யார்?
அனைவரின் கணிப்பும் பெடரர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவார் என்பதே. அவருடைய போட்டியாளர், நடாலாக இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும், ஜோகோவிக் அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த மூவரும் நட்சத்திர வீரர்கள் என்பதால் அனைவரின் கண்களும் இவர்களையே பார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில், மற்ற வீரர்கள் அதிர்ச்சித் தோல்விகளை பரிசாகத் தரும் வாய்ப்பும் உள்ளது.