கொல்கத்தா: குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய பின், பலருக்கும் என் மீதான மரியாதை அதிகரித்துள்ளது என்று கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய ரிங்கு சிங் தான், நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் ஹீரோ. நடப்பு ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 474 ரன்களை விளாசியுள்ளார். 5 அல்லது 6 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்யும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இவ்வளவு ரன்களை விளாசுவது அவ்வளவு எளிதல்ல.
அதுமட்டுமல்லாமல் யாரை அடிக்க வேண்டும், எந்த சூழலில் பேட்டை விளாச வேண்டும் என்று மாடர்ன் டே கிரிக்கெட்டுக்கான புத்திசாலித்தனத்துடன் விளையாடுவது தான் ரிங்கு சிங் மீது அதிக ஆச்சரியத்தை அதிகமாக்கியுள்ளது. நேற்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றாலும், அந்த அணி வீரர்களின் இதயத்தையும் சேர்த்து வென்றவர் ரிங்கு சிங் தான். போட்டி முடிந்து பேசிய ஒவ்வொரு வீரரும், நிர்வாகியும் ரிங்கு சிங்கை பாராட்டி வருகின்றனர்.
இன்னும் சில ரசிகர்கள், சலனமில்லாமல் கடைசி நேரத்தில் சம்பவம் செய்யும் ரிங்கு சிங், சிஎஸ்கே கேப்டன் தோனியை நினைவுப்படுத்துவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்திய அணிக்காக ரிங்கு சிங் விரைவில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரிங்கு சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நம்பினேன். அதனால் எந்த பதற்றமோ, பரபரப்போ அடையவில்லை.
இந்த ஐபிஎல் சீசன் திருப்தியாக அமைந்துள்ளது. அதனால் இந்திய அணிக்கு தேர்வாவது பற்றி நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஆடுவது என் கைகளிலும் இல்லை. எனது பயிற்சியை தொடர்வதே என்னுடைய திட்டம். இந்த ஐபிஎல் சீசன் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய பின், எனக்கு பலரும் அதிக மரியாதையை கொடுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.