மும்பை: கிரிக்கெட் இல்லாத ஒரு விளையாட்டு போட்டியை இந்தியாவில் அதிக ரசிகர்கள் பார்த்தனர் என்றால் அது ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஆடிய இறுதி போட்டிதான் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கூறுகிறது.
31-வது ஒலிம்பிக் போட்டிகள் அண்மையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று முடிந்தது. இதில், மல்யுத்த பிரிவிவில் சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார். பேட்மிண்டன் பிரிவில் விளையாடிய பிவி சிந்து இறுதிச்சுற்றுவரை வந்து தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும், வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவை பெருமைப்படச்செய்தார்.
பேட்மிண்டன் பிரிவில் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் கரோலினா மரினை எதிர்த்து பிவி சிந்து விளையாடினார். பிவி சிந்து மோதிய இந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் ஆவலோடு பார்த்து ரசித்தனர்.
இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை தவிர்த்து ஏனையை விளையாட்டுகளுக்கு விளையாட்டு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று பரவலாக கூறப்படும் நிலையில், பிவி சிந்து மோதிய இறுதிப்போட்டியை 1 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு களித்தது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை போட்டியை ஒளிபரப்பிய ஸ்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் இல்லாத ஒரு போட்டியை எந்த ஒரு சேனலிலும் இந்த அளவுக்கு இதுவரை ரசிகர்கள் பார்த்தது இல்லை என்று ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது. அதேபோல், ஸ்டார் இந்தியா நிறுவனத்தில் டிஜிட்டல் தளமான ஹாட்ஸ்டாரில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது 191 மில்லியன் பேர் தங்கள் சேனலை பார்த்ததாகவும், ஹாட் ஸ்டார் மூலமாக 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்துள்ளது. எங்களை பொறுத்தவரை இது மிகவும் பெருமை மிக்க தருணம் எனவும் ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது.