பிரான்சில் நடந்த பிரெஞ்ச் ஓபன் பேட்மிட்டன்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த சில நாட்களாக பிரென்ச் ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வந்தது. வருடாவருடம் ஆக்டொபர் இறுதியில் நடக்கும் இந்த போட்டி இந்த மாதமும் எப்போதும் போல நடைபெற்றது. ஒருவாரம் முன்பு ஆரம்பித்து இந்த போட்டியின் இறுதிச்சுற்று நேற்று பிரான்சில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர் ஸ்ரீகாந்தும், ஜப்பான் வீரர் 'கெண்டோ நிஷிமாட்டோவும்' மோதினர். இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
சாம்பியன் பட்டம் பெற்றார் ஸ்ரீகாந்த்
தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி விளையாடினார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த். அரையிறுதியில் சாய் பிரனீத் என்ற பிளேயரை மிகவும் எளிதாக வென்ற நிஷிமாட்டோ இந்த போட்டியில் மிகவும் திணறினார். மிகவும் சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர் செட்களில் எளிதாக நிஷிமாட்டோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இறுதி போட்டியில் வென்றதன் மூலம் தற்போது இவர் பிரென்ச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்து இருக்கிறார்.
வெற்றிகளின் மன்னன் ஸ்ரீகாந்த்
ஆந்திர பிரதேசத்தை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த சில வருடங்களாக மிகவும் சிறந்த பார்மில் இருக்கிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த டென்மார்க் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அதுமட்டும் இல்லாமல் ஜூன் மாத தொடக்கத்தில் நடந்த இந்தோனீசியா ஓபனிலும் வெற்றி பெற்றார். மிகவும் கடினமான போட்டியாக கருதப்படும் ஆஸ்திரேலிய ஓபனிலும் ஜூன் இறுதியில் வென்று சாதனை படைத்தார்.
உலக தரவரிசையில் முன்னேற்றம்
ஒருவருடமாக மிகவும் சிறப்பாக விளையாடியதை அடுத்து உலக பேட்மிட்டன் தரவரிசையில் ஸ்ரீகாந்த் முன்னேறி இருக்கிறார். இந்த போட்டிக்கு முன் 20வது இடத்தில் இருந்த ஸ்ரீகாந்த் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இன்னும் நிறைய பேட்மிட்டன் தொடர்கள் நடக்க இருப்பதால் அவர் விரைவில் முதல் இடத்தை பிடிப்பார் என்று பேட்மிட்டன் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கிதாம்பி ஸ்ரீகாந்த் பெற்ற வெற்றியை, பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார். முன்னதாக, மன்கிபாத் நிகழ்ச்சியிலும் மோடி ஸ்ரீகாந்த்தை பற்றி குறிப்பிட்டிருந்தார்.