ஹைதராபாத்
ஹைதராபாத்தை சேரந்த பாட்மின்டன் வீராங்கனையான புசார்லா வெங்கட சிந்து என்பதன் சுருக்கமே பி.வி.சிந்து. இவரது தந்தை ரமணா, தாய் விஜயா இருவரும் வாலிபால் வீரர்கள். ஆனால் சிந்துவுக்கு சிறுவயது முதலே பாட்மின்டனில் ஆர்வம்.
தனது 8 வயது முதல் பேட்மிண்டன் மட்டையை கையில் ஏந்த ஆரம்பித்த சிந்து, பயிற்சியாளர் கோபிசந்த் பயிற்சியில் பட்டை தீட்டப்பட்டார்.
சாதனை மங்கை
2013ம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, இதில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து சொந்தமாக்கினார். இவரது சாதனையை பாராட்டி 2013ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 2015ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
தகுதிச்சுற்று
ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்றுவரை செல்ல சிந்து கடந்து வந்த பாதையை பார்த்தால் அது எத்தனை கடினம் என்பது தெரியவரும்.
தகுதி சுற்றில் ‛குரூப் எம்' பிரிவில் போட்டியிட்ட சிந்து, தனது முதல் ஆட்டத்தில் கனடா வீராங்கனை மிச்சல் லீ உடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் ஹங்கேரியை சேர்ந்த லோரா சரோசியுடன் மோதி வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.
நாக் அவுட்
நாக் அவுட் சுற்றான ‛ரவுண்ட்-16' சுற்றில் சீன தைபே வீராங்கனை தை சூ-யிங் உடன் மோதினார். இதில் 21-13, 21-15 என்ற புள்ளிகளைப் பெற்று 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதி
காலிறுதியில் உலகின் 2ம் நிலை வீராங்கனையும், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சீனாவின் இகான் வாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் சாய்னாவுக்குப் பிறகு ஒலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 2வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை சிந்து பெற்றார்.
அரையிறுதி
அரையிறுதியில் உலகின் 6ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசாம்பி ஓக்குஹாராவை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய சிந்து பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்தார். இதன் மூலம் பேட்மிண்டனில் ஒலிம்பிக் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இறுதிச்சுற்று
பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 10வது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை சிந்து, 'நம்பர்-1' வீராங்கனை, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார். முதல்செட்டை கைப்பற்றிய சிந்து 2,3 செட்களில் போரடி தோற்றார்.
வெள்ளிப்பதக்கம்
தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் சிந்து. 8 வயதில் ஹைதராபாத்தில் தொடங்கிய பயணம் ரியோ ஒலிம்பிக்கில் சாதனை பயணமாக மாறியுள்ளது.