ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதனால் அவர் மூலமாவது இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட இம்முறை இந்தியாவின் சார்பில் அதிக வீரர்கள் இதில் பங்கெடுத்துள்ளபோதும், இதுவரை பதக்கங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. இது இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பேட்மின்டன் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து 'ரவுண்ட் 16' போட்டியில் சீன தைபேயின் டாய் இங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் உலகின் 2ம் நிலை வீராங்கனையான சீனாவின் இகான் வாங்கை எதிர் கொண்டார். இவர் கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் ஆவார்.
இருவரும் சளைக்காமல் போராடி புள்ளிகள் எடுத்ததால், காலிறுதி ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 22-20 என போராடி வென்ற சிந்து, 2வது சுற்றிலும் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றி மூலம், சாய்னாவுக்குப் பிறகு ஒலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 2வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் சிந்து. முன்னதாக கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா அரையிறுதிக்கு முன்னேறியதுடன், வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.