ஜகார்த்தா : இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் தெரிவித்துள்ளார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில், ஒரு ஆட்டத்தில், இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான சாய்னா நெஹ்வால் இந்தோனேசியாவைச் சேர்ந்த லின்டாவெனியுடன் மோதினார்.
இதில் சாய்னா 21-17, 21-17 என்ற நேர்செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு எளிதாக முன்னேறினார். இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து சாய்னா கூறியதாவது...
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரசிகர்களின் முழு ஆதரவு இந்தோனேசிய வீராங்கனைக்கு இருந்தது. இதனால் நான் சற்று பதற்றத்துடன் விளையாடினேன். ஆனால் அவர் பதற்றமில்லாமல் விளையாடினார்.
நாளை (இன்று) நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும். அவர் பந்தை வேகமாக அடிப்பதில் வல்லவர்.
இவ்வாறு சாய்னா நெஹ்வால் தெரிவித்தார்.