மோசமான ஃபில்டிங்
டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஓவரை வழக்கம் போல் தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 1 ரன்னை மட்டுமே விட்டு கொடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பெவுமா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குயின்டன் டி காக் மற்றும் ரூசோவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். ஆட்டத்தின் 9வது ஓவரில் கடைசி பந்தில் ரூசோவ் 24 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்சை முகமது சிராஜ் தவறவிட, அது சிக்சராக மாறியது.
இமாலய இலக்கு
குயின்டன் டிகாக் 43 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் ருசோவ் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் சதம் விளாசினார். ஸ்டப்ஸ் தன் பங்கிற்கு 23 ரன்கள் சேர்த்தார். முகமது சிராஜ் 17 வது ஓவரில் மட்டும் சிறப்பாக பந்துவீசி 7 ரன்களை மட்டும் விட்டு கொடுத்தார். அதன் பிறகு, 3 ஓவர்களும் ரன்கள் பறந்தன. 18வது ஓவரில் 15 ரன்களும், 19வது ஓவரில் 11 ரன்களும், தீபக் சாஹர் வீசிய கடைசி ஓவரில் 24 ரன்களும் அடிக்கப்பட்டது. இதனால் 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் அடிக்கப்பட்டது.
முக்கிய விக்கெட்டுகள்
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாக , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் வெளியேறினார். இதனை அடுத்து ரிஷப் பண்டும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டினர். வழக்கம் போல், சிக்சர், பவுண்டரி என அடித்த ரிஷப் பண்ட் 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து கேட்ச் ஆனார்.
இந்தியா தோல்வி
தினேஷ் கார்த்திக்கும் பட்டையை கிளப்ப 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 21 பந்துகளில் 46 ரன்கள் குவித்த நிலையில், கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 8 ரன்களிலும், அக்சர் பட்டேல் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. அப்போது இறுதியில் தீபக் சாஹர் சிக்சர், பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குதுகலப்படுத்தினார். 3 சிக்சர் உள்பட 17 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 18.3 ஓவரில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.